சாதியையும், சாதிப் பெயரையும் தமிழ்ப் படங்களில் பயன்படுத்த வேண்டாமென்று சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதன் பின் எடுக்கப்பட்ட பல படங்களில் அப்படிப்பட்ட அடையாளங்கள் முடிந்தவரை நேரடியாகக் கூட வெளிப்படுத்த முடியாத அளவிற்கே படங்கள் வெளிவந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி மீண்டும் புதிதாக ஒரு சாதீயப் பாதையில் இந்த படம் பயணித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் நினைத்தால் கத்தியையும் எடுக்க முடியும் என்று யாருக்கோ மணி அடித்திருக்கிறார்கள். தற்போதையை தலைமுறை இப்படிப்பட்ட சாதீய அடையாளங்கள் எதுவுமில்லாமல் வெறும் நட்பையும், காதலையும் போற்றிக் கொண்டு வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இப்படிப்பட்ட பிற்போக்கான ஒரு படம் வந்திருப்பது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என எதையோ உணர்த்துகிறது. fகும்பகோணத்தில் ஒரு கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார் விவேக். வயதான அவரது அப்பா மீது கோயில் நகையைத் திருடியதாக ஒரு பொய்க் குற்றச்சாட்டு இருக்கிறது. அதிலிருந்து அவருடைய அப்பாவை மீட்க அவருக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் கூலிக்குக் கொலை செய்யும் ரவுடியான வெங்கட் ராஜு அவருக்குப் பணம் கொடுத்துக்கு உதவுகிறார். இவரை யாரென்றே தெரியாத விவேக்கும் பணத்தை வாங்கி அப்பாவை மீட்கிறார். பின்னர், அக்ரகாரத்தின் ஏளனப் பேச்சால் மனமுடையும் விவேக்கின் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதன் பின் அந்த ஊரை விட்டு கிளம்பும் விவேக், வெங்கட் ராஜுவைத் தேடி அவர் இருக்குமிடமான காஞ்சிபுரத்திற்கு வருகிறார். அங்கு வெங்கட் ராஜுவிடம் அடைக்கலமாகிறார். விவேக்குக்கும் ‘போளி’ விற்கும் சௌராஷ்டிரா பெண்ணான ஸ்வேதாவுக்கும் காதல் மலர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் வெங்கட் ராஜு யார் என்பது விவேக்கிற்குத் தெரிய வருகிறது. காவல் துறையினரின் ஆலோசனைப்படி வெங்கட் ராஜுவை சரணடைய வைக்க முயற்சிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. eநகைச்சுவை நடிகராக இத்தனை ஆண்டுகளால் நடித்து வந்த விவேக், முதன் முறையாக நாயகனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமைதியும், சாந்தமும் தவழும் கதாபாத்திரத்திற்கு அவருடைய முகம் ஓ.கே. சில காட்சிகளில் ‘அந்நியன்’ அம்பியை ஞாபகப்படுத்துகிறார். நடிக்கிறதுக்காக சமஸ்கிருதம்லாம் கத்துக்கிட்டாராம். ஆனால், யாருக்கும்தான் புரியவில்லை. விவேக்கின் நண்பராக ரவுடியாக வெங்கட் ராஜு. சினிமாத்தனமில்லாத முகம், ரவுடின்னு சொன்னால்தான் ஏத்துக்க முடியும், அப்படி இருக்கிறாரு இவரு. படத்தில் இவர் செய்த ஒரே கொலையால்தான் கதையே நகர்கிறது. கிளைமாக்சில் திருந்துவதெல்லாம் அரதப் பழசான திரைக்கதை. விவேக் ஜோடியாக ‘போளி’ விற்கும் சௌராஷ்டிரப் பெண்ணாக ஸ்வேதா. இவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தும் போது மட்டும் பெயருக்கு சௌராஷ்டிரா பேசுகிறார்கள். அதன் பின் ஹி..ஹி…வழக்கம் போலத் தமிழ்தான். அப்புறம் ஏன் ஒரே ஒரு காட்சியில் சௌராஷ்டிரா…யதார்த்தமாம்… விவேக் நாயகனாக உயர்ந்துவிட்டதால் அவரது உதவியாளராக நடித்து வந்த செல் முருகன், தனியாக காமெடி செய்திருக்கிறார், கூடவே மயில் சாமி. ஒரு சில காட்சிகளில் சிரிப்பு வருகின்றன. வெங்கட் க்ரிஷி இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் கூட இல்லை. கத்தியை யார் பிடித்து வெட்டினாலும் வெட்டும் என்பதைச் சொல்லும் படம். அதற்காக பிராமணர், சமஸ்கிருதம் என ஒரு ஆக்ஷன் கதைக்குத் தேவையில்லாதவற்றை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். நான்தான் பாலா – நானும் ரவுடிதான்…டைப் படம்…