தமிழ் சினிமாவில் நட்பை மையமாக வைத்து நிறைய படங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அவற்றில் சில படங்கள் காதலை மையமாக வைத்தும், சில படங்கள் நட்பை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.
இந்த ‘நட்புனான என்னானு தெரியுமா’ படம் இரண்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இடைவேளை வரை கொஞ்சம் தடுமாறினாலும இடைவேளைக்குப் பிறகு கலகலப்பான படத்தைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்கிறார்.
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறு வயதிலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். பத்தாவதுக்கு மேல் தாண்டாதவர்கள். திருமணம் நடத்திக் கொடுக்கும் ‘வெட்டிங் பிளானர்’ பிசினஸை ஆரம்பிக்கிறார்கள். இடைவேளை வரை இதைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. பின்னர் ரம்யா நம்பீசன் கதைக்குள் வந்த பிறகுதான் அவர் ஒருவருக்காக மூன்று நண்பர்களும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதிலிருந்துதான் படத்தின் கலகலப்பு ஆரம்பமாகிறது. கவினை ரம்யா காதலிக்க மற்ற இருவரும் கவினை விட்டுப் பிரிய நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா, கவின் ரம்யா காதல் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சரவணன் மீனாட்சி டிவி தொடரிலேயே தன் காமெடி நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கவி.ன். ஏறக்குறைய அது மாதிரியான கதாபாத்திரம் என்பதால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நடித்து ரசிக்க வைக்கிறார்.
ரம்யா நம்பீசன் படத்தில் மிகவும் தாமதமாகத்தான் வருகிறார். பெரிய அளவில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் வரும் சில காட்சிகளில் ரசனையாகவே நடித்திருக்கிறார்.
புதுமுகம் ராஜு ஒரு பக்கம் காதல் தோல்வியிலும் சிரிக்க வைக்கிறார். மறுபக்கம் அருண்ராஜா காமராஜ் இரண்டு நண்பர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு சிரிக்க வைக்கிறார்.
தரன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். இடைவேளை வரை தாக்குப் பிடித்து உட்கார்ந்தால் இடைவேளைக்குப் பின் ஒரு என்டர்டெயின்டான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.
நட்புனா என்னானு தெரியுமா – ஏமாற்றமில்லை