மலையாளத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான நிவின் பாலி 2013ம் ஆண்டு தமிழ், மலையாளத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.
அதன்பின் அவர் நடித்த மலையாளப் படமான ‘பிரேமம்’ படத்தின் மூலமும் இங்கு எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றார். அதன் பிறகு 2017ல் வெளிவந்த ‘ரிச்சி’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்தார்.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழில் நாயகனாக நடிக்க வருகிறார்.
‘கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு’ ஆகிய படங்களை இயக்கிய ராம் இப்படத்தை இயக்கப் போகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
'அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த, தற்போது சிலம்பரன் நடிக்கும் ‘மாநாடு’ படத்தைத் தயாரித்து வரும் வி ஹவுஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று வெளியிட்டார்.
