லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.
மனோ இயக்கும் இப்படத்தில் அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார்.
தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குணசேகரன் ஒளிப்பதிவு செய்ய டேவிட் கிறிஸ்டோபர் இசையமைத்துள்ளார்.
இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாமல் அதைத் தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.
இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால், எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால், பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்குக் காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்…? அதுதான் இந்தப்படத்தின் கதை.
இதைக் கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் மனோ. குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளைக் கையாண்டுள்ளாராம். அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப் போராட்டமும் இருக்கிறதாம்.
இந்தப் படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
தற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.