‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை தன்னுடைய ‘இன்று போய் நாளை வா’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று இயக்குனரும் , நடிகருமான கே. பாக்யராஜ் புகார் கூறியிருந்தார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கே. பாக்யராஜ் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. இராம.நாராயணனும், சந்தானமும் தெரிந்தவர்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் டைட்டிலில் என் பெயரை போடவேண்டும் என்றும், அந்த படத்தின் வசூல் விவரத்தை எனக்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் தெரிவித்திருந்தேன்.
ஆனால், என்னைப் பற்றி சிலர் சமீப காலமாக சிலர் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேற்படி, படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சந்தானம் தினமும் என்னை சந்தித்து படத்தின் காட்சிகளைப் பற்றி கூறியதாகவும், எனக்கு அதைப் பற்றித் தெரியும் என்றும் கூறியிருந்தனர். சந்தானத்தை, நான் ஒரே முறைதான் சந்தித்தேன். அதுவும், ‘மாப்பிள்ளை விநாயகர்’ பட பூஜையின் போதுதான், அதன் பின் அவரை சந்திக்கவேயில்லை.
மேலும், இந்த பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு என்னை சமாதானப்படுத்தியதாகவும், நான் பெரிய தொகையை வாங்கிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். தமிழ்ப் படவுலகில் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு, எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு கூட நடக்கலாம். அதற்காகவே நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன் ”.
இந்த பிரச்சனை தொடர்பாக புஷ்பா கந்தசாமி என் மனைவி பூர்ணிமாவை 2 முறை சந்தித்து இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் , அதை இப்போது மறுக்கிறார்.
சந்தானம் ஒரு பேட்டியில், அவர் மனதில் உதித்த கதை என்று வேறு காமெடி பண்ணுகிறார்,” என பாக்யராஜ் தெரிவித்தார்.