எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வழங்க, பசங்க புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுவதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று நடைபெறுவதாக இருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று இரவு நமக்கு தகவல் வந்தது.
மேற்கொண்டு விசாரித்த போது, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் மீது , ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் இயக்குனர் ஆர். ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், சென்னை 8வது சிட்டி சிவில் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தடை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
2008ம் ஆண்டில் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவன இயக்குனர் ஆர். ஜெயராமன் , போட்டோன் பேக்டரி நிறுவனத்துடுன் புதுப் படம் தயாரிக்க ரூ.4.25 கோடியை முன்தொகையாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனால், இதுவரை படம் எடுத்துத் தரவில்லை.
மேலும், தற்போது, பி. தமன் தனியாகச் சென்று எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா ’ படத்தைத் தயாரித்து வருகிறார். கௌதம் மேனனும் சூர்யாவை வைத்து படம் இயக்கப் போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர்கள் இரண்டு பேரும் பிரிந்ததைத் தொடர்ந்தே ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பி வாங்க முடியாமல் போய்விடும் என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
அந்த வழக்கில் “கௌதம் வாசுதேவ் மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு காரணமாகவே இன்றைய இசை வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேல் விவரங்கள் விரைவில்…..