கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானது.
இந்த புயலுக்கு ‘மகாசேன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயலால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயலானது திசை மாறியுள்ளது.
தற்போது, தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 690 கிலோமீட்டர் தூரத்தில் மகாசேன் புயல் மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 12 மணிநேரத்தில் வடக்கு மற்றும் வடக்கு மேற்கு திசையில் நகர உள்ளது. பின்னர் அது வடகிழக்காக நகர்ந்து வங்காளதேசம்-மியான்மர் பகுதிக்கு செல்ல உள்ளது.
இருந்தாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று இரவு சென்னையிலும் லேசான மழை பெய்தது, இன்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. வெயிலின் கடுமையும் குறைந்து காணப்பட்டது.
இதனிடையே, இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகரும்போது தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.