இருவர் மட்டுமே நடிக்கும் ‘வித்தையடி நானுக்கு’

vithaiyadi-naanunakkuரண்டே இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் வித்தையடி நானுனக்கு. பானுமுரளி – சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை  ராமநாதன் கே. பகவதி இயக்குகிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,

“இது ஒரு சைக்கோ திரில்லர் படம்.

இந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி என்று இல்லை. இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவே. ஒரு ஆண், ஒரு பெண் இருவரைச் சுற்றியும் கதை நடக்கிறது.

வீட்டை விட்டு ஓடி வரும் பெண், வழியில் அவளது கார் பழுதாகி விடுவதால் ஆண் கதாபாத்திரம் லிஃப்ட் கொடுக்கிறது. கார் நேராக கொடைக்கானலில் ஒரு பங்களாவுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் திகிலான கதைதான் ‘வித்தையடி நானுனக்கு’.

 பெண் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் செளரா சையத் நடித்திருக்கிறார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை மிகவும் சரளமாக எழுத, வாசிக்க மற்றும் பேசவும் செய்கிறார்.

ஆண் கதாபாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டியதாகிவிட்டது… சில நடிகர்களை அணுகினோம். அவர்களது தேதி ஒத்து வரவில்லை… ஸ்ட்ரைட்டா நடிக்க வந்து விடுவதாக சிலர் கூறியும் நான் ஒத்துக் கொள்ளவில்லை… ஏனென்றால் படப்பிடிப்புக்குச் செல்லும் முன் ஒத்திகை எடுக்க வேண்டியிருந்தது… வேறு வழியில்லாமல் நானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டேன்…

படத்தில் நாயகன் – நாயகி இல்லை என்பதால் டூயட்லாம் இல்லை. ஆனால் பாடல்கள் இருக்கின்றன… எங்களது கதைக்கும் கிளாசிக்கான ரொமான்ஸ் சூழ் நிலைக்கும் ஏற்ற பாடலைத் தேடிய போது மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்கிற பாடல் எங்களுக்காகப் பாடப்பட்டது போலவே இருந்தது. அந்தப் பாடலுக்கு மேற்கத்திய நாட்டுப்புற இசையில் அற்புதமாக இசையமைத்திருக்கிறார் விவேக் நாராயணன்.  அது தவிர இரண்டு சிறிய பாடல்கள் இருக்கின்றன. எல்லாமே மாண்டேஜில் தான் படமாக்கியிருக்கிறோம்…

முழுப்படத்தையும் முடித்து ரஃப் கட் பண்ணிய பிறகு படம் 2.45 மணி நேரம் ஓடியது. படம் முழுவதும் இரண்டு பேர் பேசும் வசனங்களையும் உணர்ச்சிகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் குறைத்து 1.40 மணி நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு விறு விறுப்பான சைக்கோ திரில்லராக கொண்டு வர இருக்கிறோம். விவேக் நாராயணின் பின்னணி இசையும் ராஜேஷ் கடம் கோட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கப் போகிறது…

ரெண்டு நடிகர்கள் தாம் என்றாலும், ஒளிப்பதிவாளர், ஒப்பனைக் கலைஞர், உடை என்று ஆரம்பித்து உதவி இயக்குனர் வரை கிட்டத்தட்ட 30 பேர் 25 நாட்கள் இரவு பகலாக உழைத்துப் படப்பிடிப்பு நடத்தி வந்தோம்.

படப்பிடிப்பு முடிந்து ஐ.எஸ்.ஆர்.செல்வகுமார் மேற்பார்வையில் எடிட்டிங் உட்பட படப்பிடிப்பிற்கான பிந்தைய வேலைகள்  நடந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்,” என்றார் இயக்குனர்

Read Previous

வின்சென்ட் செல்வாவை பாராட்டிய விஜய்

Read Next

கமலுடன் நடிப்பாரா காஜல் அகர்வால் ?

Most Popular