சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் ஹிந்தி முதல் பார்வையை மும்பையில் நடைபெற்ற விழாவில் அமிதாப்பச்சன் வெளியிட்டார்.
ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் சேகர் கபூர், ரமேஷ் சிப்பி, கஜோல், அனுபம் கேர், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உட்பல பல பாலிவுட் திரைப்படப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு மிக்க விழாவைப் பற்றி அமிதாப்பச்சன் அவரது ‘பிளாக்’கில் பாராட்டி எழுதியுள்ளார்.
“இன்றைய இரவு மிகவும் சிறப்பாக இருந்தது. ரஜினிகாந்தின் சமீபத்திய படமான ‘கோச்சடையான்’ படத்தின் முதல் பார்வையை நான் வெளியிட்டேன்.
ரஜினியின் மகளான சௌந்தர்யாவால் இயக்கப்பட்டுள்ள, இந்தியாவிலேயே முதன் முறையாக படமாக்கப்பட்ட மோஷன் கேப்சரிங் திரைப்படம். உண்மையிலேயே ஆச்சரியமான முயற்சி இது.
‘அவதார், ரின் டின் டின்’ படங்கள் மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்பட்டவை.
சொல்வதற்கே பெருமையாக இருக்கிறது. சமூகத்திற்கே ஒரு பெருமையான விஷயம், ஒரு பெண் சவாலா ஒரு தொழில்நுட்பத்தை கையில் எடுத்துக் கொண்டு, அதை சிறப்பாகவும் முடித்திருக்கிறார்.
ஒரு மகள் அவரது பாசமான அப்பாவுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளார். ஒரு அப்பா மகள் மீதான நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்து மிகப் பெரும் சாதனை நிகழ காரணமாக இருந்திருக்கிறார்,” என அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத பல பாலிவுட் பிரபலங்களும் ரஜினியுடனான அவர்களது நட்பையும், அவரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி எழுதி வருகின்றனர்.
‘கோச்சடையான்’ புயல் தற்போது பாலிவுட்டையும் மையம் கொண்டு விட்டது, விரைவில் உலகத்தையே தாக்கும் என எதிர்பார்க்கலாம்.
