‘இனம்’ படத்தினை தமிழ்நாட்டில் திரையிடுவதை தாமாகவே விலக்கிக் கொண்டதாக அந்த படத்தைவெளியிட்ட தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்தாலும், சிலர் இந்த பிரச்சனையை வேறு விதமாக மாற்றி வருகிறார்கள்.
‘இனம்’ படத்தை இயக்கிய சந்தோஷ் சிவனின் , சகோதரரான சங்கீத் சிவன், “இனம்’ படம் சென்சார் ஆகி, ‘யு’ சான்றிதழ் பெற்று, வரி விலக்கும் பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற போதும், திரையரங்கை விட்டு வெளியேற வைத்தது நம்ப முடியாத ஒன்றாகும்.
இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்புறம் நமக்கு எதற்கு சென்சார் போர்டு. ஒரு படம் சென்சார் ஆன பிறகு அதை வெளியிட வைப்பது அவர்களது கடமை.
ஒரு குழு எப்படி ‘குண்டாயிசம்’ மூலம் படத்தை தடுத்து நிறுத்த முடியும், ” என்று கேள்வி எழுப்புகிறார்.
இவரது கருத்துக்கு பல மலையாள நட்சத்திரங்கள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தமிழ்ப் படங்களில் பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இனம்’ படத்தை தேர்தல் நேரத்தில் எந்த அரசியல் குழப்பங்களும் ஏற்பட வேண்டாம் என்று கருதிதான் திரையரங்கிலிருந்து எடுக்கிறோம் என படத்தை வெளியிட்ட இயக்குனர் லிங்குசாமி அறிக்கை மூலம் தெரிவித்த பிறகும் கூட, அவரிடம் இது பற்றிய கேள்விகளை எழுப்பாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழர்கள் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
‘இனம்’ பிரச்சனை இத்துடன் முடியாது போன்றே தோன்றுகிறது…