சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார் பாண்டிராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது.
முடிவடையும் தருவாயில் நெருங்கி விட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நெருங்கி விட்டதால், மறுபக்கம் படத்தின் ‘டப்பிங்’ வேலைகளும் நடந்து வருகிறதாம். கடந்த வாரம் படத்திற்கான டப்பிங் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
வழக்கம் போல நயன்தாராவுக்கு யாராவது ஒருவர்தான் டப்பிங் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தத நிலையில், இந்த படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில்தான் பேச வேண்டும் என்றாராம் இயக்குனர். ஆனால், நயன்தாராவோ, இதுவரை நான் எந்த தமிழ்ப் படத்திற்கும் டப்பிங் பேசியதில்லை. வேறு யாரையாவது பேசச் சொல்லுங்கள் என்று மறுத்து விட்டாராம்.
ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத இயக்குனர் பாண்டிராஜ், விடாப்பிடியாக நயன்தாராதான் சொந்தக் குரலில் பேச வேண்டும் என்று இருந்தாராம். படத்தில் பல காதல் காட்சிகள், அன்னியோன்யமான காட்சிகள் வருகின்றன, அவற்றில் நீங்கள் சொந்தக் குரலில் பேசினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இயக்குனரின் பிடிவாதத்தால் கடைசியாக நயன்தாரா சம்மதித்துவிட்டதாகவும் தகவல். ஆக, நயன்தாராவின் குரலழகையும் முதன் முதலில் ரசிக்கப் போகிறோம்…