தமிழக முதல்வரை அவதூறாகச் சித்தரித்த இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக மூடக் கோரி அதன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட மற்ற சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தைச் சேர்ந்த விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கேயார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, வினய் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சரியான நேரத்திற்கே வந்து விட்ட விஜய் போராட்டம் முடியும் வரை இருந்தார். அப்போது விஜய் பேசியதாவது,
“இலங்கைத் தமிழர்களுக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள், அவங்க கஷ்டத்தை தீர்க்கிறதுக்கு நிறைய ஸ்டெப்ஸ் எடுத்துகிட்டு இருக்காங்க. அதை போய் இலங்கை கவர்ன்மென்ட் டிபெஃன்ஸ் வெப்சைட்ல கேலி செய்யுற மாதிரி ஒரு கமெண்ட் பண்ணதை, உண்மையிலேயே தாயை தப்பா பேசுன மாதிரி நாங்க நினைக்கிறோம், உணர்றோம். ஒட்டு மொத்த தமிழர்களுக்குமே இது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம். இதை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்,” என்றார்.