‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைத் தொர்ந்து மிஷ்கின் தற்போது இயக்கி வரும் படம் ‘பிசாசு’. இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘பிசாசு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
படத்தைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறும் போது ‘நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ‘ஹாரர்’ படம் இயக்க வேண்டும் என்று விருப்பம். ரசிகர்களை வெறுமென பயமுறுத்துவது மட்டுமே ‘ஹாரர்’ படம் அல்ல என்பது என்னுடைய கருத்து.
‘பிசாசு’ பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை, மனதை வருடும் விஷயம் கூடத்தான். இந்த படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய கதாபாத்திரங்களுக்குக் கூட நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்துள்ளேன்.
இந்த படத்தில் மூத்த நடிகர் ராதா ரவி சார் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்து உள்ளார். கதாநாயகனாக நாகா அறிமுகம் ஆகிறார், முதல் படத்தில் அவர் காட்டும் உழைப்பும் ஆர்வமும் அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்பதை கட்டாயம் கூறுகிறது.
கதாநாயகியாக அறிமுகம் ஆகிறவர் பிரயாகா , கேரளாவில் இருந்து வந்திருக்கும் அவர் நடனக் கலைகளில் வல்லவர். 60 அடிக்கும் மேல் உயரத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாக அவர் பறந்து நடித்த காட்சி பிரமிப்பூட்டும். பிரபல ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர் இந்த படம் மூலம் ரவி ராய் என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கோணங்களில் இந்தக் காட்சிகளை பிரமாதமாக படம் பிடித்து உள்ளார்.
அர்ரோல் கொரேலி என்ற புதிய இசையமைப்பாளரை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறேன். எனக்கு வேண்டிய இசை அல்லது நான் கேட்கும் இசை வரும் வரை உழைக்கத் தயாராக இருக்கிறான்.
‘பிசாசு’ படத்தின் உயிர் நாடி கிளைமாக்ஸ் காட்சிதான். பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றிய டோனி இந்த காட்சியமைப்பில் மிரட்டி இருக்கிறார்.
புதுமுகங்களை வைத்து படமெடுத்தாலும் பட்ஜெட் பெரியது. அந்த சுதந்திரத்தை எனக்கு அளித்த, எனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,” என நெகிழ்கிறார் மிஷ்கின்.