நடிகை த்ரிஷாவுக்கும், பிரபல தயாரிப்பாளரான வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நவம்பர் மாதம் நடைபெற்றதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால், அப்போது அதைப் பற்றி த்ரிஷா, “இது போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டு போர் அடித்து விட்டது, அடுத்த வேலையைப் பாருங்கள்,” என்ற ரீதியில் கமெண்ட் போட்டிருந்தார்.
த்ரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வெளிவருவதற்குள் த்ரிஷா பற்றிய திருமணச் செய்திகள் வெளிவந்தால் அது படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் கேட்டுக் கொண்டதால்தான் த்ரிஷா அது போன்ற கருத்தைப் பதிவு செய்தார் என்றும் சொன்னார்கள்.
அதன் பின் த்ரிஷா, வருண்மணியனுடன் தாஜ்மகால் உள்ளிட்ட வட இந்தியாவில் பல இடங்களுக்கு அவருடன் சுற்றுலா சென்றார். அந்தப் புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டார்.
தற்போது இருவரது திருமணம் பற்றிய உறுதியான செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இருவரது வீட்டாரும் சந்தித்து பேசிவிட்டதாகவும், வரும் மார்ச் மாதம் இருவரின் திருமணத்தையும் நடத்தி வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்குப் பின் த்ரிஷா நடிக்க மாட்டார் என்றும் வருண் மணியனின் திரைப்படத் தயாரிப்பு, மற்றும் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனங்களுக்கு உதவியாக இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் கடந்த 12 வருடங்களாக த்ரிஷா முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.