பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழ்த் திரையுலகத்தில் காதல் படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர் செல்வராகவன். “காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி” ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
பின்னர் தடம் மாறி “புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்” ஆகிய தோல்விப் படங்களைக் கொடுத்தார். தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் செல்வராகவன் புகழின் வெளிச்சத்திலேயே இருந்தார்.
அவரின் தோல்விக்கு யுவன்ஷங்கர் ராஜாவுடனான பிரிவும் ஒரு காரணம் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள்.
இப்போது மீண்டும் தன்னுடைய ஆரம்ப காலப் படங்களின் வெற்றிக்குக் காரணமான யுவன்ஷங்கர் ராஜவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் மீண்டும் இணைந்துள்ளார். ஏற்கெனவே செல்வராகவன் இயக்கிய ‘ஆடவாரி மாடலுக்கு அர்தாலு வேருலே’ தெலுங்குப் படத்தின் நாயகியான த்ரிஷாவும் இந்த பழைய கூட்டணியில் இணைந்துள்ளார்.
இதில் புதிய கூட்டணியாக நாயகனாக சிம்புவும், மற்றொரு நாயகியாக டாப்ஸீயும் இணைந்துள்ளார்கள். பழைய + புதிய கூட்டணியுடன் மீண்டும் புதுப் பொலிவுடன் களமிறங்குகிறார் செல்வராகவன்.