தமிழ்த் திரையுலகின் அழகான காதல் திருமண ஜோடிகளான சூர்யா, ஜோதிகா நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
சூர்யா, ஜோதிகா இருவரும் திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடிக்கும் போது காதலிக்க ஆரம்பித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். பெண்களுக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ’36 வயதினிலே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த வாரம் 15ம் தேதி வெளியாக உள்ளது.
சூர்யா நாயகனாக நடித்துள்ள ‘மாஸ்’ திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, பிரணீதா நடித்துள்ளனர். யுவனின் இசையில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் இது.
கணவன், மனைவி இருவரின் படங்களும் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில் இரண்டு படங்களுமே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.