மாதவ் மீடியா தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மகாபா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, தயாரிப்பாளர் பாலாஜி கப்பா, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், பாலசரவணன், பொன்வண்ணன், திவ்யா, ஒளிப்பதிவாளர் கவின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி,
“மெல்லிசை (புரியாத புதிர்) படத்தின் டிரைலர் வெளிவந்ததும், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி என்னை அழைத்து இருவரும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று சொன்னார்.
அதன் பின் ஒரு கதையை உருவாக்கி அதை விவாதிக்கத் தொடங்கினோம். அந்தக் கதையில் ஹரிஷ் கல்யாண், பொன்வண்ணன், மகாபா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டோம்.
அலுவலகத்தில் சில மாதங்கள் அமர்ந்து கதையையும் விவாதித்தோம். ஆனால், வேறு கதையைப் படமாக்கலாமா என தயாரிப்பாளரிடம் கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார்.
இந்தப் படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட்டான படம், ஆனால், சீரியசான கான்செப்ட் படத்தில் உள்ளது. இந்தக் காலத்தில் காதல் என்ற பெயரால் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துவிட்டது.
இந்தப் படம் ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு திருப்புமுனைப் படமாக அமையும். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்திலும் நடிக்கலாம்.
இப் படத்திற்காக 32 பேரை ஆடிஷன் செய்தோம், கடைசியாக ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகத் தேர்வானார்,” என்றார்.
இந்தப் படம் மார்ச் 15ம் தேதி வெளியாகிறது.