லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 2.0.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா, நேற்று மும்பையில் நடைபெற்றது.
ஒரு தமிழ்ப் படத்தின் விழாவை சென்னையில் நடத்தாமல் மும்பையில் நடத்தியது ஏன் எனத் தெரியவில்லை.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கலை இயக்குனர் முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளர் சில்வா, விஎப்எக்ஸ் ஸ்ரீனிவாச மோகன், வால்ட் ஜோன்ஸ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, வசனகர்த்தா ஜெயமோகன், தமிழ் நடிகர்கள் ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் பேசும் போது, “இந்தப் படத்தில் எந்த கதாபாத்திரத்தையாவது தேர்வு செய்ய வாய்ப்பு கொடுத்திருந்தால் அக்ஷய் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருப்பேன். படத்தில் அவர்தான் கதாநாயகன். இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் ஒரு படமாக இருக்கும்,” என்றார்.
அக்ஷய் குமார் பேசும் போது, “25 வருடங்களாக நான் மேக்கப் போட்டதேயில்லை. அதையெல்லாம் சேர்த்து இந்தப் படத்திற்காக 3 மணி நேரம் மேக்கப் போட பொறுமையாக இருந்தேன். ரஜினி சார் கூட நடித்தது எனக்குப் பெருமை,” என்றார்.
ஷங்கர் பேசும் போது, “எந்திரன்’ படத்தை விட இந்தப் படம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு படம் இயக்கும் போதும் என்னை ரசிகனாக நினைத்துதான் படங்களைத் தயார் செய்வேன். 2.0 படத்திற்குப் பிறகு 3.0, 4,0, 5,0 இயக்கும் எண்ணம் இருக்கிறது,” என்றார்.
முதல் பார்வை வெளியிடும் போது ஹிந்தி நடிகர் சல்மான் கான் வந்து சிறப்பித்தார். ரஜினி சார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்காக இங்கு வந்தேன் என்றார்.
2.0 படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது.