மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களையும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘காளி’, ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, கமல்ஹாசன் நடித்த ‘குரு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஐ.வி. சசி இன்று சென்னையில் காலமானார்.
அவருடைய மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கவிஞர் வைரமுத்து ஐ.வி. சசி மறைவு குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ‘ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம்’ என்று கூறியுள்ளார்.
“திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி அவர்களின் மறைவுச் செய்தி என்னை அதிர வைத்தது. புகழ்மிக்க ஒரு தென்னிந்திய இயக்குநரை இந்திய சினிமா இழந்துவிட்டது.
அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். பாராதிராஜாவின் நிழல்கள் நான் பாட்டெழுதிய முதல் படம் என்றாலும், திரையில் முதன்முதலில் வெளிவந்தது ரஜினி நடித்து ஐ.வி.சசி இயக்கிய காளி என்ற படமாகும். அந்த வகையில் அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.
கலையே வாழ்வு; வாழ்வே கலை என்று வாழ்ந்தவர் மறைந்துவிட்டார்.
மலையாள மண் இந்திய சினிமாவுக்குத் தந்த கலைக் கருவூலத்தைக் காலம் திருடிவிட்டது. அவர் புகழ் இந்திய சினிமாவில் என்றென்றும் வாழும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலை உலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என வைரமுத்து கூறியுள்ளார்.