சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.
சமுதாயக் கருத்துடன் கூடிய ஒரு கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
“நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ படங்களின் வரிசையில் இடம் பெறக் கூடிய ஒரு படம்.
நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளேன். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்தப் படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்தப் படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.
‘வெண்ணிலா கபடி குழு’வுக்குப் பின் ஒளிப்பதிவாளர் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்தப் படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார்.இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும்.
என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ‘ராஜபாட்டை’ ஒரு தோல்விப் படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். ‘மெர்சல்’ படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியைப் போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது.
இந்தப் படத்தில் விக்ராந்த் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருவார். என்னுடைய லைப்ரரியில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும்.
மிகப் பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 10 வெளியாகின்றது. இது விறுவிறுப்பான படமாக அமையும்.’ நான் மகான் அல்ல’, பாண்டியநாடு’ ஆகிய படங்களைப் போல இப்படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். இந்தப் படத்தின் கதை உங்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும்,” என்கிறார் சுசீந்திரன் கூறினார்.