லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா, நாளை நவம்பர் 1ம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அனுமதியையும் காவல் துறை வழங்கியுள்ளது.
ஏற்கெனவே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்ட போது அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கடைசியாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அது குறித்து ஒரு பேட்டியில் விளக்கமளித்தார். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இருக்கைகளோ 6 ஆயிரம் மட்டுமே. எனவேதான் விழாவை ரத்து செய்தோம் என்றார்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள வெற்றி விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார், என்ன கதை சொல்லப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டின் போது ரஜினிகாந்த் ‘காக்கா, கழுகு’ கதையைச் சொன்னார். அதில் ரஜினிகாந்த் ‘காக்கா’ என விஜய்யைத்தான் குறிப்பிட்டார் என ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதமாகவே பேசினார்கள்.
‘ஜெயிலர்’ படத்தின் வசூலை முறியடித்து ‘லியோ’ வசூல் சாதனை புரிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். எனவே, அந்த ‘காக்கா, கழுகு’ கதைக்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஒரு கதையைச் சொல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி ஒரு கதையை அவர் சொன்னால் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் கடும் வாதம் எழ வாய்ப்புள்ளது.