மீண்டும் சர்ச்சைக்குள்ளான ‘இந்தியன் 2’

எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியொன்றின் மூலம் ‘இந்தியன் 2’ திரைப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டது. மோசமான விமர்சனங்களையும், குறைவான வசூலையும் பெற்றது ‘இந்தியன் 2’.

எந்தவொரு மொழியிலும் ‘இந்தியன் 2’ படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், ஷங்கர் இயக்கியதில் மோசமான படம் என்ற பெயரையும் பெற்றது. அதுமட்டுமன்றி, ஓடிடியில் வெளியான உடன் அதன் காட்சியமைப்புகளை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

தற்போது எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியொன்றில், ‘இந்தியன் 2’ படத்தில் வரும் தன்னுடைய வீடாக வரும் அரங்குகள் மட்டும் 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதை வைத்து இணையத்தில் தற்போது ‘இந்தியன் 2’ விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. 3 காட்சியில் வரும் வீட்டிற்கு 8 கோடியில் அரங்குகளா, தயாரிப்பாளருடைய பணத்தில் விளையாடி இருக்கிறார்கள் என்று பலரும் ஷங்கரை கடுமையாக சாடி வருகிறார்கள்.

‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்னும் படம் வெளியாகவுள்ளது. இதில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்து வருகிறார்.

Read Previous

ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார்.

Read Next

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நித்யா மேனன்

Most Popular