அஞ்சான் – ரிரிலீஸ் – விமர்சனம்

2014-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய எடிட்டிங் உடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பயி போன்றோர் நடித்த இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் படம், இப்போது சுமார் 36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, விறுவிறுப்பான வடிவத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகள், மாஸ் எலிமெண்ட்ஸ் என அனைத்தும் இளம் தலைமுறைக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் உள்ளது.
 
நவம்பர் 28, 2025 அன்று தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன இப்படம், சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், புதிய பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவும் அமைந்துள்ளது.

மும்பையில் வளர்ந்து வரும் டான் சூர்யா, தனது நெருங்கிய நண்பர் வித்யுத் ஜம்வாலுக்காக எதையும் செய்யத் தயாரானவர். அவருக்காக ஒரு சம்பவத்தில் ஈடுபடும் போது, சமந்தாவுடன் ஏற்படும் நட்பு படிப்படியாக காதலாக மாறுகிறது. இதற்கிடையே, அவர்களின் வளர்ச்சியைப் பொறாமைப்படும் மும்பையின் பெரிய தாதா மனோஜ் பாஜ்பயி, அவர்களை அழைத்து அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார். பதிலுக்கு சூர்யா, மனோஜுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறார்.

இதனால் கோபமடைந்த மனோஜ், சூர்யா மற்றும் வித்யுத் ஜம்வாலை கொலை செய்து விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து அண்ணனைத் தேடி மும்பை வரும் தம்பி சூர்யா, விசாரணையில் ஈடுபடுகிறார். எதிரிகள் அவரையும் தாக்க முயல, திடீரென அவர் மும்பை டானாக உருமாறுகிறார். இறந்ததாகக் கருதப்பட்டவர் எப்படி உயிர்த்தெழுந்தார்? – இதை ஆச்சரியமும் மாஸும் கலந்த சம்பவங்களாக விவரிக்கிறது படம்.

2014 வெளியீட்டில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், சூர்யா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘அஞ்சான்’. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாகப் பார்க்கும் வகையில், சூப்பர் ஹிட் பாடல்கள், கலர்புல் ஆக்ஷன் என கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் நிறைந்தது. சில திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டாலும், இப்போது ரீ-ரிலீஸ் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளது.

பழைய ரசிகர்களுக்கு அறிந்த கதையாக இருந்தாலும், புதிய எடிட்டிங் எதிர்பார்ப்பையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கிறது. புதியவர்களுக்கு முழு என்டர்டெயின்மெண்ட் உத்தரவாதம்.

சூர்யாவின் ஸ்டைலிஷ் உடை, ஹேர் ஸ்டைல், குச்சியுடன் வலம் வரும் தோற்றம் – இவை சிறுவர்களிடம் ஹிட் ஆனவை. இப்போதும் ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

சமந்தா, அழகிய தோற்றத்துடன் பார்வையாளர்களை ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் அவரது நடனம், ஆடை அலங்காரம் – ஆபாசம் இல்லாமல் அழகாக உள்ளது.

வித்யுத் ஜம்வால் மற்றும் வில்லன் மனோஜ் பாஜ்பயியின் நடிப்பு மிரட்டலாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது. மற்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இன்னும் ஹிட், பின்னணி இசை ஆக்ஷனுக்கு பலம் சேர்க்கிறது.

எடிட்டர் ஆண்டனி, ரீ-ரிலீஸில் 36 நிமிடங்கள் குறைத்து, காமெடி பகுதிகளை (சூரி போன்றவை) அகற்றியது பெரும் பலம்.

இயக்குநர் லிங்குசாமி, கமர்ஷியல் மாஸ் படமாக கொடுத்து, சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார். பழைய தவறுகளை சரி செய்து, படத்துக்கு புத்துயிர் அளித்துள்ளார். ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் – சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம், அனைவருக்கும் பொழுதுபோக்கு!

Read Previous

ப்ரைடே – விமர்சனம்

Read Next

ரஜினி கேங் – விமர்சனம்

Most Popular