அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுசீந்திரன்,
“நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப் படமாக அமைந்ததோ, அதைப் போலவே இந்த திரைப்படமும் வெற்றிப் படமாக அமையும். ‘பாண்டிய நாடு’ போலவே இந்தப் படத்திலும் அனைத்துப் பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது.
இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன், இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ‘ஜீவா’ திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிப் படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும், தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்குத் தெரிந்தது.
சில காலத்துக்குப் பிறகு சந்தீப்புடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம், ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவே அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிகச் சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்,” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.