டிஜிட்டல் உரிமை கொடுத்து லாபம் சம்பாதியுங்கள் – விஷால்

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஷால்,

“இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்துக்  கொள்வது என்னுடைய சொந்தப்  படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தால், கண்டிப்பாக விழாக்களில் கலந்துக்  கொள்ள வேண்டும் என்று இல்லை.

எனக்குப் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்துக் கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன்.

விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர்         பை-லிங்குவல் தம்பி. தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். அவர் மாநகரம் திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும்.

மெஹ்ரீனுடன் நான் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார். அவரும் வெற்றி பெற வேண்டும். இந்தத் திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். இது என்னுடைய பட விழா போல் உள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் , இசையமைப்பாளர் இமான், தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் பிளாட்பார்ம்ல் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும்.

சாட்டிலைட் உரிமை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிடத் தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி, அவை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம்.

‘துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும்’ ஆகிய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும்,” என்றார் விஷால்.

Attachments area

Read Previous

உண்மையாகவே பயமுறுத்தி நடுங்க வைக்கும் படம் ‘அவள்’

Read Next

‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, சந்தீப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும் – சுசீந்திரன்

Most Popular