முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் பரத்.
’குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘விருமன்’, ‘புலிக்குத்தி பாண்டி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் முத்தையா. அனைத்துமே கிராமப் பின்னணியைக் கொண்ட கமர்ஷியல் படங்களாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே மக்கள் மத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றவை ஆகும்.
தற்போது தனது மகன் விஜய் முத்தையாவையே நாயகனாக்கி படமொன்றை இயக்கி வருகிறார் இயக்குநர் முத்தையா.
கிராமம் மற்றும் நகரம் என்று இரண்டிலும் நடப்பது போன்று இதன் கதையினை உருவாக்கியுள்ளார்.
இந்தக் கதையில் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் பரத். தற்போது பரத் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படமாக்கி வருகிறது படக்குழு. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக வில்லனாக பரத் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய படங்களைப் போல, இந்தப் படத்தினையும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலேயே படமாக்கி வருகிறார் முத்தையா.