‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய கணவர் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தைத் தயாரித்தார்.
அந்த படத்தை அடுத்து வேறு ஒரு கதையை இத்தனை காலமாக உருவாக்கி வந்த கிருத்திகா, யதேச்சையாக அந்த கதையை தனுஷிடம் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட தனுஷ் மிகவும் பிடித்துப் போனதால் அவரே தயாரிக்கவும் சம்மதித்திருக்கிறாராம்.
படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் மட்டுமே தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளார். மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் இந்த படத்தில்தான் விஜய் சேதுபதி நடிப்பதாகக் கூறப்பட்டது. அவரும் அதை மறுத்தார். இயக்குனர் கிருத்திகாவும் இதுவரை நான் விஜய் சேதுபதியை சந்திக்கவேயில்லை எனக் கூறியிருக்கிறார்.
விரைவில் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.