வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான ‘காவியத் தலைவன்’ படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நல்ல திரைப்படங்களை வரவேற்கும் ரசிகர்களும், திரையுலகத்தினரும் நேற்று முதலே படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். ஒரு அருமையான கலாச்சாரப் பதிவாக இப்படம் இருக்கிறது என்பதுதான் அனைவரும் பாராட்டாக இருக்கிறது.
படத்தில் நடித்துள்ள சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகா, அனைகா அனைவரையுமே திரையுலகத்தினர் பாராட்டி வருகிறார்கள். இந்தப் பாராட்டுக்களால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.
“இப்படி ஒரு பாராட்டு எனக்குக் கிடைப்பதற்கு பல வருடங்களாகி இருக்கிறது. இப்படிப்பட்ட கனவை நிறைவேற்றியதற்காக இயக்குனர் வசந்தபாலனுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
இப்படிப்பட்ட படங்கள் எப்போதாவதுதான் உருவாகும். உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டு வந்து கொண்டிருக்கிறது. 2014ம் ஆண்டு ஒரு நடிகனாக எனக்கு என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஆண்டாக அமைந்துள்ளது. முன்னர் ‘ஜிகர்தண்டா’, இப்போது ‘காவியத் தலைவன்’, அடுத்து ‘எனக்குள் ஒருவன்’.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என மொத்த திரையுலகமும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி வருகிறார்கள்.
விஜய் அண்ணா, படத்தைப் பார்த்தார், மிகவும் நேசித்தார். எங்களை அழைத்துப் பாராட்டினார், அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது,” என சித்தார்த் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.