விஜய் வசந்த், மகிமா, பிரபு, சரண்யா, ரகுமான், சுகன்யா என்று பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த ‘என்னமோ நடக்குது’ படம் வியாபார ரீதியாகவும் அமோக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆனார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடிக்கும் படம் ‘சிகண்டி’. நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் நடிக்க சூரியிடமும், ஒரு அழுத்தமான, மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க சமுத்திரக்கனியிடமும் பேசி வருகிறார்களாம்.
“பள்ளிக் கல்வி சம்பந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. அதில் இதுவரை சொல்லாத, சொல்லப்படாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அந்த விஷயங்களை முழுமையாக தருவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாத காலம் சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து பல நல்ல தகவல்களை திரட்டி உள்ளோம். அதைத் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்.
ஒரு இயக்குனராக என் பார்வையில் கல்வியின் தரம், குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த ‘சிகண்டி’யில் வெளிப்படும்.
படம் பார்க்கிற ஒவொருவரும் படத்தில் ஏதோ ஒரு சம்பவத்தில் தங்களைத் தொடர்புப்படுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் மே மாதம் வெளியாக உள்ளது,” என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.
‘என்னமோ நடக்குது’ படத்தைப் போலவே ‘சிகண்டி’ படத்தையும் அதிக பொருட் செலவில் டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிக்கிறார்.