எண்ணற்ற காதல் படங்களின் வரிசையில் மற்றுமொரு காதல் படம். ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ராஜேஷுக்கும், பக்கத்து ஊர் பெரிய மனிதரின் மகளான கௌரி நம்பியாருக்கும் இடையே காதல் வருகிறது. ஊரில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் கௌரியின் அப்பாவிற்கு மகள் காதல் பற்றித் தெரியவர மகளைக் கண்டிக்கிறார். ராஜேஷை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். இருந்தாலும் காதலர்கள் அவர்கள் காதலில் வலிமையாக இருக்கிறார்கள். இதன் பின் கௌரியின் முறை மாமன் கையில் காதல் ஜோடிகள் சிக்கிக் கொள்ள இருவரையும் அவன் கொலை செய்ய முயற்சிக்கிறான். இதிலிருந்து காதலர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பல படங்களில் பார்த்துப் பழகிப் போன ஒரு கதைதான். இருந்தாலும் கிளைமாக்ஸ் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி அமைந்துள்ளது. படத்தில் நடித்துள்ள பலரும் மலையாள நட்சத்திரங்கள் என்பதால் பேச்சில் மட்டுமல்ல, படத்திலும் ஒரு மலையாள வாடை அடிக்கிறது. இசை, ஒளிப்பதிவு உட்பட தொழில்நுட்ப விஷயங்களும் சுமாராகவே உள்ளது. நாயகன் ராஜேஷ், தாடியை மட்டும் வைத்துக் கொண்டும், லுங்கி கட்டிக் கொண்டும் மட்டுமே தன்னை ஒரு வெட்டி ஆபீசரா காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். கௌரி நம்பியார் சில காட்சிகளில் அழகாகவும் சில காட்சிகளில் ‘அக்கா’வாகவும் தெரிகிறார். கிளைமாக்ஸை மட்டும் வித்தியாசமாக யோசித்து கொடுக்க முயற்சித்தவர்கள் அதை படத்தின் ஆரம்பத்திலிருந்தே செய்திருக்கலாம்.