டிஜிட்டல் யுகத்தில் தவறுகள் செய்வதும் எளிதாகிறது, அந்தத் தவறுகள் பரவுவதும் மிகவும் எளிதாகிறது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அது வைரலாகப் பரவி விடுகிறது.
ஒரு வீடியோவையோ, புகைப்படத்தையோ எடுக்க வேண்டும் என்றால் ஒரு சாதாரண மொபைல் போன் போதும் என்ற நிலை வந்துவிட்டது. அதனால் எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கூடத் தெரியாமல் எது எதையோ மொபைல் போன்களில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஒரு மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோதான் இந்தப் படத்தின் கதைக்கே ஆதாரம்.
அகில், நயனா இருவரும் காதலர்கள். ஒரு முறை நயனா குளிப்பதை தன் மொபைல் போனில் வீடியோவாக எடுக்கிறார் அகில். அது தெரிந்ததும், நயனா அதை அழிக்கச் சொல்கிறார். அப்போது அழித்து விட்டு, பின்னர் அதை மீண்டும் எடுத்துவிடுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மொபைல் போன் காணாமல் போகிறது. அது சரண் கையில் கிடைக்கிறது. அதைக் கேட்டுச் செல்லும் அகிலிடம், மொபைல் போனைத் திருப்பித் தர வேண்டுமென்றால் சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிறார் சரண். வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்கிறார் அகில். அதன் பின் நடக்கும் சம்பவங்கள், திருப்பம், திருப்பம், திருப்பம் நிறைந்த மீதிக் கதை.
அகில், நயனா இருவரும் அவர்களது கதாபாத்திரங்களில் முடிந்தவரை சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களை விட வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் அவர்களுடைய அனுபவ நடிப்பின் மூலம் முத்திரை பதிக்கிறார்கள்.
இன்றைய இளம் சமுதாயத்திற்குத் தேவையான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நட்டி குமார். அதே சமயம், டெக்னிக்கலாக இன்னும் தரமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கலாம். அதுவே, பல இடங்களில் படத்தை ரசிப்பதைக் குறைத்து விடுகிறது.
திரைக்கதையில் சேர்த்த விறுவிறுப்பு, திருப்பங்களை இன்னும் தொழில்நுட்ப விஷயங்களில் அதிக கவனத்துடன் காட்டியிருந்தால் ‘எவனவன்’ அனைவரும் ரசிக்கும் படமாக அமைந்திருக்கும்.