சினிமா பார்க்க கடந்த சில வருடங்களாக தியேட்டர்களுக்கு பெண்கள் அதிகமாக வராததன் காரணம் டிவி சீரியல்கள்.
தமிழில் உள்ள முக்கிய டிவி சேனல்கள் அனைத்திலும் பகல், இரவு நேரங்களில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆரம்ப காலங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே டிவி சீரியல்கள் ஒளிபரப்பு இருந்தது. அதன்பின் அதை கூடுதலாக ஒரு நாளுடன் சனி வரை நீட்டித்தனர்.
இப்போது அதை ஞாயிறுக்கும் சேர்த்து திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஏழு நாட்களிலும் டிவி சீரியல் ஒளிபரப்பு என ஆரம்பித்துவிட்டது ஜீ தமிழ் டிவி.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே, ஜீ தமிழ் சீரியல்களான ‘செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, யாரடி நீ மோகினி, கோகுலத்தில் சீதை, சத்யா, நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய சீரியல்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தன.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழழ’ நிகழ்ச்சி, பிற்பகல் 1.30 மணிக்கு பிரியா ராமன் தொகுத்து வழங்கும் ‘ஜீன்ஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளும் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகி உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிக ரேட்டிங்கைப் பெற டிவி தொடர்களை நீட்டித்துள்ளார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம்.
தமிழ் சேனல்களில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது ஜீ தமிழ் டிவி.