வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், லோகேஷ்வரன் இசையமைப்பில், புகழ் மகேந்திரன், மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் புகழ் மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன்.
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராகப் பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்ட செட் அமைத்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
முதல் பார்வை போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி கோர்ட் கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை என்ற வாசகமும் கவனம் ஈர்த்துள்ளது.
மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.