உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில், ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
சிறந்த படைப்புகளைத் தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த குடும்பத் திரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது. இதே ரீல்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்திலும் உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான், ’வடசென்னை’ பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜும் பணியாற்றுகிறார்கள். பிரபல எழுத்தாளர் அழகிய பெரியவன், விஜய்குமார், தமிழ் மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.
தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் பணிபுரிந்த C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ஏழுமலை ஆதிகேசவன் பணியாற்றுகிறார். ’ஸ்டன்னர்’ சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஸ்ரீகிரிஷ் மற்றும் ராதிகா நடனம் அமைத்துள்ளனர்.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் இறுதிக் கட்டப் பணிகளை துவங்க உள்ளார்கள்.