தமிழ் சினிமாவில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்க தெலுங்கு நடிகரான ராம் சரணை தமிழுக்கு அழைத்து வருகிறார் ஷங்கர்.
தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பேசப்பட்டு வந்தவர் ஷங்கர். ஆனால், ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு அந்தப் பெயரை இயக்குனர் ராஜமௌலி பறித்துக் கொண்டார்.
தமிழைத் தவிர இதுவரையில் ஹிந்தியில் மட்டுமே படத்தை இயக்கிய ஷங்கர் முதல் முறையாக இயக்கப் போகும் இந்தத் தெலுங்குப் படத்தை தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
இந்தப் படம் மூலம் ராம் சரண் தமிழுக்கும் வர உள்ளார். ஏற்கெனவே, இப்படி தமிழுக்கு வரும் ஆசையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் ‘ஸ்பைடர்’ படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு தோல்விதான் கிடைத்தது.
ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளார். இவர்தான் முதலில் ‘இந்தியன் 2’ படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அதன்பிறகுதான் லைக்கா நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்று தெரியாத நிலையில் ஷங்கரின் இந்த புதிய பட அறிவிப்பு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.