‘சலார்’ படத்தின் வசூல் பெருமளவு குறைவாக இருப்பதால், ‘புஷ்பா 2’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ், ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார்’.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, உலகமெங்கும் டிசம்பர் 22-ம் தேதி வெளியானது. ’கே.ஜி.எப்’ இயக்குநர், பிரபாஸ் ஹீரோ என்று விநியோகஸ்தர்கள் பலரும் மாபெரும் விலை கொடுத்து இதன் உரிமையைக் கைப்பற்றினார்கள்.
’சலார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை மக்கள் மத்தியில் பெறவில்லை. இதனால், மாபெரும் வசூல் செய்யும் என்று நினைக்கப்பட இந்தப் படம் சுமார் 500 கோடி ரூபாயை மட்டுமே கடந்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த வியாபாரத்தை முன்வைத்து, ‘புஷ்பா 2’ படத்தின் வியாபாரம் பின் தங்கியுள்ளது. ஏனென்றால் ‘புஷ்பா 2’ படத்தின் எதிர்பார்ப்பை முன்வைத்து, தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களிடமிருந்து பெரும் தொகையை முன்பணமாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ‘சலார்’ படத்தினை மேற்கோளிட்டு எந்தொரு விநியோகஸ்தரும் இதற்கு முன்வருவதாகத் தெரியவில்லை.
குறிப்பாக, ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையில் இருந்தும் சுமார் 100 கோடி வரை எதிர்பார்க்கிறது ‘புஷ்பா 2’ படக்குழு. ஆனால், இந்த மதிப்பு 60 கோடி முதல் 70 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் ‘புஷ்பா 2’ படத்தின் வியாபாரம் முன்பு இருந்ததை விட மிகவும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.