பிரசாந்த் வர்மா – ரன்வீர் சிங் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஹனுமான்’. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ரன்வீர் சிங்கும் ஒருவர்.
ரன்வீர் சிங் – பிரசாந்த் வர்மா இருவருமே சுமார் 3 முறைக்கும் மேல் சந்தித்துப் பேசினார்கள். இதனால் இந்தக் கூட்டணி உறுதியாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டார்கள். அதே போல் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது.
இந்தக் கூட்டணி படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. அனைத்து ஒப்பந்தங்களுமே கையெழுத்தாகிவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ரன்வீர் சிங் படத்தினை முடித்துவிட்டு தான் ‘ஹனுமான்’ படத்தின் 2-ம் பாகமான ‘ஜெய் ஹனுமான்’ படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் வர்மா.
இதனால் ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் வெளியீடு 2025-ம் ஆண்டிலிருந்து, 2026 ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.