36 நாட்களில் முடிக்கப்பட்ட ‘நிமிர்’

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘நிமிர்’.

பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படக் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

நடிகர் ஜார்ஜ் பேசுகையில்,

“நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார்,” என்றார்.

நாயகி பார்வதி நாயர் பேசுகையில்,

“பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள்,” என்றார்.

இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் பேசுகையில்,

“தமிழில் ‘நிமிர்’ எனது 3வது படம். இந்தப் படத்தில் ‘எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை’ என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் பிரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் என சொன்னதை யாரும் நம்பவில்லை,” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசும் போது,

“பிரியதர்ஷன் சாருடன் நான் வேலை செய்யும் 4வது படம். விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தில் இருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். பிரியதர்ஷன் சாரின் ‘ஒப்பம்’ படத்தை விட இன்னும் சிறப்பாக ஒளிப்பதிவு பண்ணனும்னு சார் சொன்னார். உதயநிதியின் தோற்றத்தை கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறோம். அனைவருக்கும் இந்த தோற்றம் பிடிக்கும்,” என்றார்.

தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா பேசும் போது,

“பிரியதர்ஷன் என்னுடைய ஃபேவரைட் இயக்குனர். அவர் இயக்கும் படத்தைத் தயாரித்தது என்னுடைய அதிர்ஷ்டம். சமுத்திரக்கனி, எம்எஸ் பாஸ்கர், மகேந்திரன் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மலையாளம் சினிமாவிலும் வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் மட்டும் தான் சென்னையில் ஆபீஸே இல்லாமல் ஒரு படத்தை முடித்திருக்கிறோம். அந்தளவுக்கு ரெட் ஜெயண்டும், ஃபோர் பிரேம்ஸும் எங்களுக்கு நிறைய உதவி செய்தனர். இனி சென்னையிலும் ஆபீஸ் போட்டு நிறைய படங்களை தயாரிப்போம்,” என்றார்.

சண்முக ராஜன் பேசுகையில்,

‘சில சமயங்களில்’ படத்துக்குப் பிறகு பிரியதர்ஷன் சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். மலையாளத்தில் ஒரிஜினல் படத்தைப் பார்த்திருந்தாலும், இந்தப் படத்தை பார்க்கும் போது புதுவிதமாக இருக்கும்,” என்றார்.

சமுத்திரக்கனி பேசும் போது,

“இந்தப் படத்துக்கு 10 நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார். அதோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுதச் சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரைப் போட்டிருக்கிறார்.

பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்,” என்றார் சமுத்திரக்கனி.

நாயகன் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,

“படப்பிடிப்புக்குப் போகும் போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், ‘நிமிர்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை.

‘தெறி’ படத்துக்குப் பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரக்கனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார்.

நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்த படத்தில் தான் அமைந்துள்ளன. கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரக்கனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார்.

நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன்,” என்றார்.

இயக்குனர் பிரியதர்ஷன் பேசுகையில்,

இது தமிழில் என்னுடைய 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார் இயக்குனர் பிரியதர்ஷன்.

ரெட் ஜெயண்ட் அர்ஜூன் துரை, நடிகர்கள் கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், நாயகி நமீதா பிரமோத், சண்டைப் பயிற்சியாளர் ராஜசேகர், சோனி மியூசிக் அசோக் பர்வாணி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர்.

Read Previous

நான்கு விழாக்களை நடத்திய ஸ்டுடியோ க்ரீன்

Read Next

இதயங்களை இணைக்கும் படம் ‘கேணி’

Most Popular