நடிகர் கமல்ஹாசன், நாளை மறுநாள் பிப்ரவரி 21ம் தேதி முழுமையான அரசியல்வாதியாக மாற இருக்கிறார். அன்று அவருடைய கட்சியின் பெயர் பற்றியும், கட்சியின் கொள்கைகள் பற்றியும் அறிவிக்க உள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பதை முன்னிட்டு கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று மதியம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார், இரவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார். அனைவரிடமும் அவரது அரசியல் பிரவேசம் குறித்துதான் பேசியிருப்பார். அவர்களிடமிருந்தும் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.
ரஜினிகாந்துக்கு முன்பாகவே தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த கமல்ஹாசன், தொடர்ந்து அதற்கான வேலைகளை இடைவெளியில்லாமல் செய்து வந்தார்.
இன்னும் இரண்டு நாட்களில் அவருடைய கட்சியின் பெயர் கழகம் ஆக இருக்கப் போகிறதா கட்சி ஆக இருக்கப் போகிறதா என்பது தெரிந்துவிடும்.