தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் படம் ‘2.0’.
இப்படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் முடிவடையாததால் அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. எனவே, அதே தேதியிலே ‘காலா’ படத்தை வெளியிட முடிவு செய்தார்கள்.
இதையடுத்து ‘2.0’ படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என்றார்கள். அதன் பின், அந்த தினத்திலும் வெளியிட வாய்ப்பில்லை தீபாவளிக்குதான் வரும் என்றார்கள்.
இப்போது தீபாவளிக்கும் படத்தை வெளியிட முடியுமா என்பது சந்தேககமாக உள்ளதாம். ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை ஒப்படைத்திருந்த அமெரிக்க கம்பெனியால் திட்டமிட்டபடி வேலையை முடிக்க முடியவில்லை. எனவே, தற்போது வேறொரு நிறுவனத்திடம் அந்த வேலைகளை ஒப்படைத்திருக்கிறார்களாம். அவர்கள் அந்த வேலைகளை முடிக்க ஏழெட்டு மாதங்கள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, கிறிஸ்துமஸ் விடுமுறையில் வேண்டுமானால் ‘2.0’ படம் வரலாம் என்பதுதான் தற்போதைய நிலவரம்.