விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜித் தற்போது நடிகை சதா நடிக்கும் ‘டார்ச்லைட்’ படத்தை இயக்கி வருகிறார்.
கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.
இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது .
பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.
இது ஒரு பீரியட் பிலிம் . 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது . படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது,
“நான் முதலில் இயக்கிய “தமிழன்” படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்லாமல் பெரிய வெற்றியும் பெற்றது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் ‘டார்ச் லைட்’ படத்திற்கான விஷயம் மனதில் பதிந்த போது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது . நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.
வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .
இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.
நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். 40 பேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார், நடிக்கச் சம்மதம் என்றார்.
இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கி கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். ” என்கிறார் இயக்குநர் .
படத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா , புதுமுகம் உதயா , இயக்குநர் வெங்கடேஷ் , சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இது 90களில் நடக்கும் கதை என்பதால் பலவற்றைக் கவனிக்க வேண்டியிருந்ததாம். அப்போது இருந்த இரு வழிப் பாதைகள் எல்லாம் இப்போது நான்கு வழிப்பாதைகளாக மாறி விட்டன. எனவே சிரமப்பட்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படமாக்கியுள்ளனர். செல்போன், டிவி எல்லாம் இல்லாமல் படமாக்க வேண்டியிருந்ததாம்.
டார்ச் லைட் படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல் , இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து , எடிட்டிங் -மாரீஸ் , கலை -சேகர் , நடனம் – சிவராகவ் , ஷெரீப். தயாரிப்பு அப்துல் மஜீத், எம். அந்தோனி எட்வர்ட் , ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.
‘டார்ச் லைட்’ படத்தில் இயக்குனர் மஜீத்-தின் திறமையைப் பார்த்த நடிகை சதா, அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளாராம். அப்படத்தை இயக்குனம் வாய்ப்பையும் இயக்குனர் மஜீத்-திற்கு அளித்திருக்கிறார்.