அப்பா, மகனைக் கவர்ந்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கார்த்திக் அவரது மகன் கௌதம் கார்த்திக் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர்.

அப்பா கார்த்தி, மகன் கௌதம் கார்த்தி இருவரையும் இந்தப் படம் மிகவும் கவர்ந்துள்ளது. அவர்களது படங்களில் இந்தப் படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

விழாவில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்தப் படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார் தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்தக் கதையை எடுக்க முடியும் என்றேன். கார்த்திக் சாரை அணுக உதவியாக இருந்த இயக்குனர் கண்ணன் சாருக்கு நன்றி.

தமிழ் சினிமாவில் கார்த்திக் சார், ஷூட்டிங்குக்கு ரொம்ப லேட்டா வருவார், அவர வச்சி எப்படி படத்தை எடுப்பீங்கனு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, அவர் அப்படிலாம் இல்லை, மிக வேகமாக படத்தை முடிக்க அவர் மிக முக்கிய காரணம். நான் கேட்டுக் கொண்டதால் வரல‌ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்தது ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரம் என்பதால் ட்ரைலரில் அவரை காட்ட முடியவில்லை. என் குரு இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் நடித்தது என் பாக்கியம். மே 25ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

“விக்ரம் வேதா படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சும்மா ஏனோ தானோவென படங்களை ஒப்புக் கொள்ளக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். அந்த நேரத்தில் தான் தனஞ்செயன் சார் இந்த படத்துக்காக அழைத்தார். மரியாதைக்காக போய் சந்திக்கலாம் என்று தான் போனேன். கதையை கேட்டபிறகு தான் இதன் ஆழம் புரிந்தது. மௌனராகம் படத்தில் இளையராஜா சார் ஒரு தீம் இசையை அமைத்திருப்பார். அப்போது ஏன் இசை அப்படி இருந்தது என்று புரியவில்லை. ஆனால் அதன் அழுத்தம் மிகப் பெரியது. அதே போல இந்த படத்திலும் ஒரு தீம் இசையை அமைத்திருக்கிறேன்,” என்றார் சாம் சிஎஸ்.

“தனஞ்செயன் சாரின் ஸ்டைல் மிகவும் பிடித்தது, அவரின் சரியான திட்டமிடல் புதிதாக இருந்தாலும் அது தான் சினிமாவுக்கு தேவை. கார்த்திக் சார் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார். அவருக்கு ஷூட் முடிந்தாலும் வீட்டுக்கு போக மாட்டார், அங்கேயே இருந்து ஷூட்டிங்கை கவனிப்பார். மகேந்திரன் சாருக்கு ஆக்‌ஷன் கட் சொன்னது என்னுடைய மிகப் பெரிய பாக்கியம்,” என்றார் இயக்குனர் திரு.

ஒரு சிறப்பான குழுவை இந்த படத்துக்காக ஒருங்கிணைத்திருக்கிறார் இயக்குனர் திரு. அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார். அப்பாவுக்கும், சதீஷுக்கும் இந்த படத்தில் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. இதில் ஆக்‌ஷன் மிக அதிகம், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. சந்திரமௌலி அனுபவம் காலம் கடந்து என் மனதுக்குள் இருக்கும். அப்பா இதுபோல தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்றார் நாயகன் கௌதம் கார்த்திக்.

“இந்த படம் ஒரு அழகான அனுபவம். மணிரத்னம் உருவாக்கிய ஒரு அற்புதமான படைப்பு அந்த சந்திரமௌலி. 150 படம் பண்ணின பிறகும் என்னைப் பற்றி சில பேரு ஏன் அப்படி சொன்னாங்கனு தெரில. 1981ல் நான் நடிக்க வந்தேன், அதில் இந்தப் படம் மிக முக்கியமான படம். கௌதம் தான் ஒரு கதை இருக்கு கேளுங்கனு சொன்னான். கதை கேட்ட பிறகு ரொம்ப பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நடித்தது எனக்குப் பெருமை. சிவகுமார் அவர்களை சித்தப்பானு தான் கூப்பிடுவேன். அவர்கள் குடும்பத்தில் சிவகுமார், சூர்யா, கார்த்தி எல்லோருடனும் நடித்து விட்டேன். இந்தப் படத்தில் சர்ப்ரைஸாக அவரது மகள் பிருந்தா பாடியிருக்கிறார். இயக்குனர் மகேந்திரன் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசையாக இருந்தது. இந்த படத்தின் மூலம் அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி,” என்றார் கார்த்திக்.

“தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தமிழ் சினிமாவின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பொறுமையாக வேலை நிறுத்தத்துக்கு நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் இந்திய சினிமாவே இன்று நம்மை திரும்பிப் பார்த்திருக்கிறது. தனஞ்செயன் சாரின் கச்சிதமான திட்டமிடலால் தான் இந்தப்படம் இவ்வளவு சரியாக வந்திருக்கிறது. மகேந்திரன் சார் பற்றி இந்தத் தலைமுறைக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. அவரை தற்போது நடிகராக பார்ப்பதும் மகிழ்ச்சி. திருவின் எல்லா படத்திலும் தண்ணீருக்குள் ஒரு பாடல் எப்படியாவது வந்து விடுகிறது. ஆனால் பார்க்க மிக அழகாக வந்திருக்கிறது,” என்றார் நடிகர் விஷால்.

விழாவில் பாடகி பிருந்தா சிவகுமார், இயக்குனர்கள் கண்ணன், விஜய், அருண் வைத்யநாதன், சசி, ராதாமோகன், கௌரவ், எஸ் எஸ் ஸ்டான்லி, தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, ரகுநாதன், பி எல் தேனப்பன், மதன், நடிகர்கள் சூர்யா, ஆர்யா, விஜய் ஆண்டனி, ஷாந்தனு, சந்தோஷ் பிரதாப், இயக்குனர் பெரோஸ்,இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் பி கண்ணன்,தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, மைம் கோபி, விஜி சந்திரசேகர், மகேந்திரன், அகத்தியன், ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குனர் சுசீந்திரன், ரிச்சர்ட் எம் நாதன், கலை இயக்குனர் ஜாக்கி, எடிட்டர் சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர் ஜெயலக்‌ஷ்மி, கார்த்திகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Read Previous

அமோக முன்பதிவில் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’

Read Next

காலா – டிவி உரிமை 75 கோடி ?

Most Popular