‘எழுமின்’ டிரைலர் விழா, ஒரே மேடையில் விஷால், சிம்பு

‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாக உள்ள ‘எழுமின்’. இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் ஒரே மேடையில் சிம்பு-வும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக தீவிரமாகப் பேசியவர் சிம்பு. தயாரிப்பாளர் சங்கத்திலும் சிம்பு விஷாலுக்கு எதிராகவே கம்பு சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த மாதம் நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் சிம்பு கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார். அது பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை.

ஆனால், இன்றைய ‘எழுமின்’ விழாவில் விஷால், சிம்பு ஒரே மேடையில் சிரித்துப் பேசிக் கொண்டு அருகருகே அமர்ந்ததை விழாவுக்கு வந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜி.. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தேவயானி பேசியதாவது,

‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். விழாவுக்கு வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

கார்த்தி பேசும்போது,

‘இப்படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் காலேஜ், பள்ளி விழாவிற்குச் செல்கிறேன். அங்கு எல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதற்கு இந்த படம் உதாரணமாக இருக்கும். என் பொண்ணுக்கு இந்த படத்தைக் கண்டிப்பாகக் காட்டுவேன்.

என் பொண்ணும் தற்காப்பு கலை கற்று வருகிறாள். குழந்தைகளும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவர்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பயந்து நடுங்காமல், துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும், திருப்பி அடிக்க வேண்டும். அதற்கு தற்காப்புக் கலைகள் தான் கைகொடுக்கும். அதனால் தற்காப்பு கலைகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தைரியமாக இந்த படத்தை எடுத்த இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தில் நடித்திருக்கிற பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்,” என்றார்.

விஷால் பேசும்போது,

‘நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா குட் டச், பேட் டச் எது என்று சொல்லி தர வேண்டும். இந்த படத்துக்கு கொடி அசைக்க நான் வரக் கூடாது. ஜாக்கிசான் தான் வர வேண்டும். இந்த பசங்க என்ன இன்ஸ்பையர் பண்ணிருக்காங்க. மியூசிக் நல்லா வந்திருக்கு. விவேக் எழுதியிருக்க பாட்டு ரொம்ப நல்லாருக்கு. விவேக் உண்மையை தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு. இந்த படத்துக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க. பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கத்துக் கொடுங்க,’’ என்றார்.

விவேக் பேசும்போது,

‘‘எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரைக் கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்னை அரசியல்ல கோர்த்து விடுறாங்க. தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் ‘ஏழு மீன்’னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க. சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.

விஷாலுக்கு பல பிரச்சினை இருக்கு. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைக்கு மத்தியில வந்திருக்காரு. நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க. இந்த டிரைலர் லாஞ்ச்க்கு இப்போ ட்ரெண்ட்ல இருக்க 3 பேர் வந்திருக்காங்க. எனக்காக வந்த எல்லாருக்கும் நன்றி. அப்போ இருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கும், என் படத்துக்கும் பல பிரச்சினை வந்தது, ஆனால் இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு முறைப்படுத்தி வருகிறார்,” என்றார்.

சிம்பு பேசும்போது,

‘‘நான் பொதுவாக இசை வெளியீட்டு விழா, உள்ளிட்ட விழாக்களுக்கு எல்லாம் போக மாட்டேன். விவேக் சார் இந்த படத்த பத்தி சொன்னாரு. சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்த கொடுத்திருக்கார். விவேக் ஒரு படத்துல நடிக்கும் போது இன்னொருவரை ஒரு சீன் நடிக்க வைக்க வேண்டும் கேட்டேன். அவர் உடனே சரி என்று சொன்னார். அப்படி அவர் சொல்லலனா சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்க முடியாது. இந்த படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க. நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிப்பு கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா, அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனு தான் பாக்குறாங்க. பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ, அந்தத் திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை, போட்டிலாம் வேணாம்.

நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலை எதிர்த்து பேசினேன். ஆனா நடிகர் சங்க கட்டிடம் கட்டும் போது நல்ல மனசோட விஷால் என்னை அழைத்தார். அவருடைய மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.

உங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப் பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள் தான். என்னுடைய ரசிகர் ஒருத்தன் என் மேல இருக்க அன்புல எனக்கு கட் அவுட் வச்சப்போ ஏற்பட்ட தகராறுல இறந்து போயிட்டான். அத விட எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால், அந்த தகராறு விசயத்துல 9 பேர் கைதாகி இருக்காங்க. ஒரு நாள் எதார்த்தமா அவர் நண்பர்களை பார்த்தேன். போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. என்ன விசயம் கேட்டப்ப தான் விஷயத்த சொன்னாங்க. அந்த ரசிகர் எத்தனை முறை எனக்காக கட் அவுட் வச்சிருப்பாரு. அதனாலத்தான் அவனுக்காக போஸ்டர் ஒட்டுனேன். அத நான் பப்ளிசிட்டிக்காக பண்ணதா சொல்றாங்க. ஆனா அதுக்காகலாம் நான் பண்ணல. எனக்கு கட் அவுட் வச்சி பால் ஊத்தி உங்க அன்பை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. உங்க மனசுல நான் இருக்கேனு எனக்கு தெரியும். இனிமே, எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம்.

நான் எப்பவும் என் இஷ்டப்படி தான் இருப்பேன். அது பல பேருக்கு பிரச்சினையா இருக்கு. இனி அந்த பிரச்சினை வராம பாத்துக்கிறேன். நான் லேட்டா போறதனால எல்லாருக்கும் கஷ்டம்னா நான் இனிமே லேட்டா போக மாட்டேன்,” என்றார்.

Read Previous

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘விஜய் அவார்ட்ஸ்’

Read Next

ஆர்ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடிக்கும் ‘எல்கேஜி’

Most Popular