அர்ஜுன் நடித்த ‘ஒற்றன்’, சர்வானந்த், ரவிகிருஷ்ணா, கமலினி முகர்ஜி நடித்த ‘காதல்னா சும்மா இல்லடா’ ஆகிய படங்களை இயக்கிய இளங்கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ‘அடித்தளம்.’
‘அங்காடி தெரு’ மகேஷ், ‘அழகன் அழகி’ ஆருஷி ஜோடியாக நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் காமெடியனாக நடித்திருக்கிறார். இப்படம் கட்டிடத் தொழிலாளர்களின் கதையை மையமாக கொண்டது.
சென்னையை சுற்றியுள்ள சில கட்டிடங்களில் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக மகேஷையும் ஆருஷியையும் கல்லையும் மண்ணையும் சுமக்க வைத்தாராம் இளங்கண்ணன்.
படம் பற்றி இயக்குனர் இளங்கண்ணன் கூறியதாவது,
“என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்ட ஆரம்பித்தார்கள். அப்போது நான் கவனித்த சில விஷயங்கள்தான் இந்த படம் உருவாக காரணமாக இருந்தது. வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கும் இவர்கள் அந்த வீடு வளர வளர அந்த கட்டிடத்தின் மீது காட்டும் அக்கறையை விவரிக்கவே முடியாது.
அங்கேயே நாள் முழுக்க உழைத்து அங்கேயே ஒரு ஓரமாக குடிசை போட்டு தங்குவார்கள். இப்படி மாதக்கணக்காக இவர்கள் பார்த்து பார்த்து கட்டிய வீடு வளர்ந்து நிற்கும்போது, அதற்குள் செல்வதற்கே, அந்த வீட்டு சொந்தக்காரரின் அனுமதி வேண்டும் இவர்களுக்கு.
யார் யாரோ காரில் வருவார்கள். வீட்டை பார்ப்பார்கள், அட்வான்ஸ் கொடுப்பார்கள். தங்கள் முயற்சியில் கட்டப்பட்ட இந்த வீட்டுக்கும் அவர்களுக்கும் அதற்கப்புறம் எந்த சம்பந்தமும் இருக்காது.
இதற்குள் கட்டிட தொழிலாளிகளான மகேஷுக்கும் ஆருஷிக்கும் காதல் வருகிறது. அந்த காதலுக்கும் ஒரு எதிர்ப்பு வருகிறது. அது எப்படி, யாரால்? இருவரும் இணைந்தார்களா என்பதை விறுவிறுப்பாகவும், அழுத்தமாகவும் கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறேன்.
படம் பற்றி கொஞ்சம் உருக்கமாகவே கூறுகிறார் நாயகன் மகேஷ், “நான் நடிக்க வருவதற்கு முன்பு மிக சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவன். பல நாட்கள் கட்டிட வேலைக்கு போயிருக்கிறேன். அதனால் எனக்கு எந்த சிரமமும் தெரியவில்லை. எனக்கு என்னுடைய பழைய ஞாபகங்கள் வந்துருச்சு.
அங்காடி தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு என்னை வழிநடத்த ஆள் இல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த படம் மறுபடியும் எனக்கு அந்தளவுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் ,”என்றார்.
படத்துக்காக ஹீரோயின் ஆருஷியும் கஷ்டப்பட்டுதான் நடிச்சிருக்காராம்.
ஆருஷி படம் பற்றி கூறுகையில், “ என்னை இந்த படத்தில் கமிட் பண்ணும்போதே, ரொம்ப ஜாலியா கேரவேன்லேர்ந்து இறங்கி வந்து நடிச்சுட்டு போற கேரக்ட்டர் இல்லம்மா. கஷ்டப்படணும் என்றார் இளங்கண்ணன் சார். அப்ப சாதாரணமாதான் நினைச்சேன். ஆனால் ஸ்பாட்டுக்கு வந்த ரெண்டாம் நாளே தலையில சிமென்ட் சட்டியை ஏத்துவாருன்னு நினைச்சு கூட பார்க்கல.
செருப்பு கூட போடாமல் வெறும் காலோடு வெயிலில் நின்று கஷ்டப்பட்டேன். இந்த படத்தின் வெற்றி என்னை தமிழ்சினிமாவில் ரொம்ப காலம் நிலைச்சு நிற்க வைக்கும்னு நம்புறேன்,” என்றார் ஹீரோயின் ஆருஷி.