கவிஞர் முத்துலிங்கம், ம.வே. பசுபதி, பால. ரமணி, ம. லோகநாயகி ஆகிய 4 தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது-
இந்த விருதுகளை, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முதுலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.
2012ம் ஆண்டில் சிறந்த தமிழ் அமைப்புக்கு தமிழ்த்தாய் விருதும், சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு கபிலர் விருதும், உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.
இத்தமிழ்ப்புத்தாண்டு முதல் ஆண்டுதோறும் கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களை பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும், சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்படும் என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான கம்பர் விருது முனைவர் பால. ரமணி, சொல்லின் செல்வர் விருது முனைவர் ம. லோகநாயகி ஆகியோருக்கு வழங்க முதலமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கபிலர் விருது கவிஞர் முத்துலிங்கத்துக்கும், உ.வே.சா. விருது பேராசிரியர் ம.வே. பசுபதிக்கும் வழங்கப்பட உள்ளது.
மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் 15ம் தேதியன்று முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.
2013ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான தில்லி தமிழ்சசங்கத்திற்கு வழங்க முதலமைச்சர் தேர்வு செய்துள்ளார்.
இந்த அமைப்பிற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாயும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.