கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானது.
இந்த புயலுக்கு ‘மகாசேன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த புயலானது வங்கதேசம் -மியான்மர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்காக புயல் நகரும் என்பதால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னத்தால் அடுத்த 48 மணி நேரத்திற்கு அந்தமானில் மழை பெய்யும் என்றும் இதனால் அந்தமான் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்,”தென்மேற்கு வங்க கடலில் உருவான ‘மகாசேன்’ புயல் இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 1550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியது. இன்று மதியம் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை,” என்றும் தெரிவித்தார்.
கடும் வெயிலால் அவதிப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு இந்த கோடையை சமாளிக்கும் விதத்தில் கன மழை வராமல் போனது ஏமாற்றமே.