ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ஹிந்திப் படம் ஒன்றை 2014ம் ஆண்டு தயாரிக்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ (2011), ‘வத்திக்குச்சி’ (2013) , ஆகிய படங்களைத் தயாரித்தனர். தற்போது அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி’ படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் படம் இயக்குவது பற்றி ஏ.ஆர். முருகதாஸ் குறிப்பிடுகையில், “எங்களது இணைந்த தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் ஹிந்திப் படம் இயக்குவது பற்றிய அறிவிப்பை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழுக்கு அடுத்து ஹிந்தியிலும் நாங்கள் இணைந்து பணி புரிந்து பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளோம்,” என்றார்.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், “எங்களது நிறுவனத்தில் ஏஆர். முருகதாஸ் ஹிந்திப் படம் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது. 2011 முதல் அவருடைன் இணைந்து பணி புரிந்து வருகிறோம். முருகதாஸ், கதையை சொல்வதிலும், படத்தை உருவாக்குவதிலும் சிறந்தவர். அவருடன் தமிழில் இணைந்து பணியாற்றியது மதிப்பு மிக்கது. ஹிந்தியிலும் அவருடன் இணைந்து ஒரு நல்ல படத்தை கொடுக்கவிருக்கும் நாளை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.