‘தலைவா’ படம் திட்டமிட்டபடி வெளியாகாமல், பத்து நாட்களுக்குப் பிறகு நாளை வெளிவருகிறது.
இந்த இடைபட்ட நாட்களில் விஜய் ‘பேப்பர்’ அறிக்கை மூலமாகவும், ‘வீடியோ’ பேச்சு மூலமாகவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
படம் நாளை வெளிவருவதை முன்னிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்து விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
“ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. இதனால், கடந்த பத்து தினமாக எனக்கு, தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.