ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் A .ரகுராம் தயாரிப்பில் , விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் , அஜீத் குமார் – ஆர்யா, மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘ஆரம்பம்’ படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்தியேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து ‘U ‘ சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் படத்தை பற்றி ஏகமனதாக பாராட்டியதாக கூறப்படுகிறது.
இப்படம் இந்த மாதம் 31ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக வெளியிடப்பட உள்ளது.
வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை ‘வீரம்’ படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்கு ஹைதராபாத் செல்ல உள்ள அஜீத் குமாரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்யேக காட்சியை திரையிட்டனர்.
இதில் அவரது குடும்பத்தினர் , தயாரிப்பாளர் ஆகியோர் படம் பார்த்தனர். படத்தை மிகவும் ரசித்த அஜீத் குமார் காட்சி முடிந்தவுடன் இயக்குனர் விஷ்ணுவர்தனை மனமார பாராட்டினார் . அதற்கு பின்னர் ஆர்யாவை தொலை பேசியில் நலம் விசாரித்ததோடு தனது பாராட்டையும் தெரிவித்தார்.
“ இந்த படத்தில் உங்களது நடிப்பு மிகவும் பிரமாதம் . நான் மிகவும் ரசித்து பார்த்தேன் .திரையில் நீங்கள் டாப்சியுடன் தோன்றும் காட்சிகள் இளமை , அழகு …எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளது . இந்த படம் உங்களை நிச்சயம் ஒரு புதிய உயரத்துக்கு கூட்டிச் செல்லும் , தொடர்ந்தது வெற்றி படங்களை குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ‘ என கூறினார் .
பதிலுக்கு ஆர்யாவும் ‘ இந்த பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது. உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நிச்சயம் நடிக்க வருவேன் ‘ என நெகிழ்ச்சியுடன் கூறினார் .
இவர்களின் உரையாடலை கேட்டு ரசித்த நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இந்த பரஸ்பர மரியாதை தமிழ் திரை உலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என கூறினார் .