‘கோச்சடையான்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷுட்டிங் சமயத்தில் இயக்கம் மேற்பார்வையும் செய்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
படப்பிடிப்பு முடிந்ததும் அவர் இயக்கிய ஹிந்தி படத்தின் வேலை காரணமாக ‘இயக்கம் மேற்பார்வை’ பணியிலிருந்து விலகினார். அதன் பின் அந்த பணிக்கு ‘மதுர’, ‘மிரட்டல்’ படங்களின் இயக்குனர் மாதேஷ் இயக்கம் மேற்பார்வை பணிக்கு நியமிக்கப்பட்டார்.
ஆனால், தற்போது வெளி வரும் விளம்பரங்களில் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயர் மிகவும் சிறிய அளவில் வெளியாகி வருகிறது. இது சம்பந்தமாக அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்திய வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.
“ராணா’ படத்தை எடுக்க முடியாத சூழ்நிலையில் ரஜினிசாருக்காக நான் எழுதிக் கொடுத்த கதைதான் ‘கோச்சடையான்’. என்னையே ரஜினி சார் இயக்கச் சொன்ன போது படத்தில் டெக்னிக்கலாக பல விஷயங்கள் இருப்பதால், அதில் திறமை வாய்ந்த அவரின் மகள் சௌந்தர்யாவே இயக்கட்டும் என்று சொன்னேன்.
மற்ற படி லண்டன் போன்ற இடங்களுக்கும் ஷுட்டிங்கிற்காகச் சென்று, பின்னர் டப்பிங் வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன்.
ஆனால், இப்போது சௌந்தர்யாவுக்கு சமமாக எனது பெயரை போடாமல், மாதேஷ் என்பவரின் பெயர் ‘டைரக்ஷன் மேற்பார்வை’ என போட்டிருக்கிறது.
என்னுடைய பெயரை ஏன் சிறிதாக போட்டார்கள் என்பது தெரியவில்லை.
உண்மையை யாராலும் மறைக்க முடியாது. என்னை புறக்கணித்தார்களா என்பது தெரியாது. அப்படியே அது உண்மையாக இருக்குமானால் நான் கவலைப்படவுமில்லை. இதனால் எனக்கு புதுசா பெயர் வந்து விடப் போவதுமில்லை.
என்னை யாரும் அழிக்க முடியாது. நான் வளர்வதும் தேய்வதும் ஆண்டவன் கையில் இருக்கிறது,” என்று பேட்டி அளித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
ரவிக்குமாரின் இந்த வருத்தம் ரஜினிகாந்திற்கு தெரிய வந்திருக்குமா ?